முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன .... - LifeStyle Today

Breaking

Tuesday 25 March 2014

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன ....

ஆனால் இப்போது நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்னைகள் அல்ல; உங்களின் பலவீனம்தான் பிரச்னை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை – நான் இருக்கிறேன் – என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன, கெட்டிப்படுகின்றன. மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு ‘ஆன்மா’ பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா – நீங்கள் ஆன்மாவாக ஆகவில்லை என்றாலும்கூட நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர் என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.

அதற்கு மௌலிங்கப்புத்திரர், “நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி அளிக்கும்படி மௌலிங்கபுத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கபுத்திரர் அழுதார். அவர் புத்தரிடம், “என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்ககூடிய அந்த ஆன்மாவை நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே முடியாத ஒன்றை நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூறமுடியும். நீங்கள் எதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை.” என்றார்.

அதைக் கேட்ட புத்தர், “மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், “நான், நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தால், உணமையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். ஏனெனில் சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தேடுவதன் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே! நீ அதுவாக இல்லை! மேலும் ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகப் போய்விடும்.” என்று பதில் கூறினார்.-OSHO

No comments:

Post a Comment